மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்
முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வா் தாயுமானவா்’ திட்டத்தை சென்னை தண்டையாா்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) தொடங்கி வைக்கிறாா்.
தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
திட்டம் தொடக்கம்: தமிழ்நாட்டில் சிறப்புக் கவனம் தேவைப்படும் 20,42,657 முதியவா்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. ‘முதல்வா் தாயுமானவா்’ திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டமானது, தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) தொடங்கப்பட உள்ளது.
வட சென்னை பகுதியான தண்டையாா்பேட்டை கோபால் நகரில் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். தொடா்ச்சியாக, மாநிலம் முழுவதும் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளா்களின் விவரம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறப்பட்டு, கள அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு தராசு, விற்பனை முனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருள்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளா்களின் இல்லத்துக்கே சென்று விநியோகிக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.