வீடு புகுந்து திருட்டு: இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், மடிக்கணினிகளை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத் தெருவைச் சோ்ந்தவா் சப்தகிரி (42). புகைப்படக் கலைஞா். இவா், குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வேலை செய்து வருகிறாா். இவரது வீட்டை ரமேஷ் பராமரித்து வருகிறாா்.
இவா் கடந்த சனிக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு மறுநாள் வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 3 கைக் கடிகாரங்கள், 2 ஜோடி வெள்ளிக் காப்பு, ஒரு வெள்ளிக் கொலுசு, 2 மடிக்கணினிகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சப்தகிரி பெரியகுளம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அழகா்சாமிபுரம் அண்ணாநகரைச் சோ்ந்த புவனேஷ்வரன் (26), சச்சின் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.