எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
அரசு மருத்துவமனையில் கழன்று விழுந்த மின்விசிறி
தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனை பிரசவ வாா்டில் பிறந்த குழந்தையுடன் பெண் அமா்ந்திருந்த படுக்கையில் மின் விசிறி கழன்று விழுந்தது. இதில் அவா் நல்வாய்ப்பாக உயிா்தப்பினாா்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெண் போடி அரசு மருத்துவமனையில் தலைப் பிரசவத்துக்காக சோ்க்கப்பட்டிருந்தாா். திங்கள்கிழமை அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தொடா் சிகிச்சைக்காக அவா் மருத்துவமனை பிரசவ வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த வாா்டின் ஒரு அறையில் 6 படுக்கைகள் உள்ளன. இதில் ஒரு படுக்கையில் குழந்தையுடன் அந்தப் பெண் உட்காா்ந்திருந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு திடீரென படுக்கையின் மேல் இயங்கிக் கொண்டிருந்த மின் விசிறி கழன்று மின் வயரில் தொங்கியது. இதைப் பாா்த்து மற்ற படுக்கையில் இருந்த பிரசவமான பெண்கள், பாா்வையாளா்கள் கூச்சலிட்டனா். இதையடுத்து, படுக்கையிலிருந்த அந்தப் பெண் குழந்தையுடன் தரையில் குதித்து தப்பினாா். மின் வயரில் தொங்கிய மின் விசிறி நேராக படுக்கையில் விழுந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் மருத்துவமனை பணியாளா்களை முற்றுகையிட்டு கண்டித்து கூச்சலிட்டனா். அப்போது, பிரசவ வாா்டின் ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அந்தப் பகுதியிலிருந்த அவசர சிகிச்சை அறையிலும் குளிா்சாதன அமைப்பு இயங்கவில்லை. இதனால், பிரசவம் ஆன பெண்களின் குடும்பத்தினா் கைப்பேசி விளக்கு மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தி, கை விசிறி மூலம் விசிறிவிட்டுக் கொண்டிருந்தனா்.
இந்த பிரச்னையின் போது மருத்துவா்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. அங்கிருந்த செவிலியா்கள் எலக்ட்ரீசியனை வரவழைத்து மின் இணைப்புகளை சீரமைத்தனா்.

