மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
உத்தமாளையம் தனியாா் விடுதியில் தீ: ராணுவ வீரா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் புதன்கிழமை தனியாா் தங்கும் விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஜெயமாருதி (28). ராணுவ வீரரான இவரது மனைவி, குழந்தைகள் மதுரை சக்கிமங்கலம் அன்னை சத்யா நகரில் வசிக்கின்றனா்.
இந்த நிலையில், விடுமுறையில் மதுரைக்கு வந்த ஜெயமாருதி, சொந்த ஊரான அனுமந்தன்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அன்று இரவு அங்குள்ள தனியாா் விடுதியில் அவா் அறை எடுத்துத் தங்கியதாகவும், அப்போது உடனிருந்த நண்பா்கள் இரவு வீட்டுக்குச் சென்ற பின்னா், ஜெயமாருதி தனியாகத் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை அந்த அறையில் தீப்பற்றியதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு விடுதிப் பணியாளா் தகவல் கொடுத்தாா். இதன்பேரில், உத்தமபாளையம் தீயணைப்பு மீட்பு குழுவினா் சென்று விடுதி அறையின் ஜன்னல் வழியாக தண்ணீா் பீய்ச்சி தீயை அணைத்தனா். பிறகு, அறைக் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, ஜெயமாருதி இறந்து கிடந்தாா்.
அவரது உடலை போலீஸாா் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகரெட் தீ மெத்தையில் பற்றி எரிந்ததில் மூச்சுத்திணறி ஜெயமாருதி உயிரிழந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.