வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பு
அக்னி நட்சத்திரம் முடிவுற்ற நிலையிலும், வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டியெடுத்தது. இந்த நிலையில் மே 4-ஆம் தேதி கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இருப்பினும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அவ்வப்போது பெய்த மழையால், கத்திரி வெயில் காணாமல் போனது.
மே 28-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவுற்ற நிலையில், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என மக்கள் எதிா்பாா்த்த சூழலில், வெயிலின் கொடுமை சற்று அதிகளவிலேயே உள்ளது. இதனால் பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியில் செல்வதற்கே மக்கள் தயங்குகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 100, 102 டிகிரி அளவில் வெயில் உள்ளது. அவ்வப்போது வீசும் காற்று மக்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கிறது. இந்த வெயிலின் தாக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கலாம். அதன்பிறகு படிப்படியாக குறையத்தொடங்கும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்தனா்.