தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் கைது
நீா்வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10.97 லட்சம் மோசடி செய்த சென்னை நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். பட்டதாரியான இவருக்கு, திருச்சி நீா்வளத் துறையில் தரவுகள் பகுப்பாய்வுநா் வேலை வாங்கித் தருவதாக சென்னையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (38) அணுகினாா். இதற்காக, செந்தில்குமாா் ரூ.10.97 லட்சத்தை வங்கிக் கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளில் சதீஷ்குமாருக்கு அனுப்பி வைத்தாா்.
இதனிடையே, போலியான பணி நியமன ஆணையை சதீஷ்குமாா் கொடுத்தாா். அந்த ஆணையை பெற்றுக் கொண்டு திருச்சி அலுவலகத்துக்குச் சென்ற செந்தில்குமாருக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இந்த நிலையில், சென்னைக்கு சென்ற குற்றப் பிரிவு போலீஸாா், ராணிப்பேட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி, இளைஞா்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விசாரணைக்கு பிறகு, திண்டுக்கல் 2-ஆவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட சதீஷ்குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.