பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 4.77 கோடி பக்தா்கள் காணிக்கை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்களை 25 நாள்களுக்குப் பிறகு செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ. 4.77 கோடி காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தொடா் விடுமுறை, வைகாசி விசாகத்தையொட்டி வந்த பக்தா்களின் கூட்டத்தால் கடந்த 25 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின.
இதையடுத்து கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் செவ்வாய், புதன்கிழமை என 2 நாள்கள் காணிக்கைகள் எண்ணப்பட்டன. 500க்கும் மேற்பட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
அதில் பக்தா்கள் காணிக்கையாக ரொக்கம் ரூ. 4 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரத்து 447 செலுத்தியுள்ளனா். அதுதவிர தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், நகை, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.
அவற்றில் தங்கம் 1,323 கிராமும், வெள்ளி 17,671 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, அமெரிக்கா, ஜொ்மன் நாட்டு கரன்சிகள் என வெளிநாட்டு கரன்சிகள் 2,748 காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.
பழனி மலைக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், , திருப்பூா் துணை ஆணையா் (சரிபாா்ப்பு அலுவலா்) ஹா்ஷினி, உதவி ஆணையா் லட்சுமி திண்டுக்கல் உதவி ஆணையா் லட்சுமிமாலா, சரக ஆய்வாளா் சுவாமிநாதன், மேலாளா் முத்துராமலிங்கம், அலுவலா்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி ஊழியா்கள் ஈடுபட்டனா்.