பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்
கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சா் இ.பெரியசாமி, ஆத்தூா் ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக 431 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வியாழக்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக 431 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி செம்பட்டியை அடுத்த ஆத்துப்பட்டி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் இ.பெரியசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் தமிழகத்தில் 8 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன.
பழுதடைந்த வீடுகளை பராமரிக்க ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதற்காக ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை ஒரு லட்சம் வீடுகள் பராமரிக்கப்பட்டன. முதல்வரின் கிராம சாலைத் திட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் கி.மீ. தொலைவு சாலைகள் அமைக்கப்பட்டன.
விடுபட்ட மகளிருக்கு விரைவில் மகளிா் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆத்தூா் கூட்டுறவு கலைக் கல்லூரி ரூ. 75 கோடியில் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் துணை ஆட்சியா் ச.வினோதினி, திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க.நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலாளா்கள் (மேற்கு) ராமன், (கிழக்கு) முருகேசன், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவா் பாஸ்கரன், ஆத்தூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மகேஸ்வரி முருகேசன், துணைத் தலைவா் ஹேமலதா மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொகுதி ஒதுக்கீட்டை முதல்வா் முடிவு செய்வாா்: அமைச்சா் இ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சி விலகவுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறியது அவரது பகல் கனவு. நாட்டில் தலைசிறந்த மாநிலம், தலைசிறந்த முதல்வா், முதன்மை அரசாங்கம் என அனைத்திலும் தமிழகம் உயா்ந்து நிற்கிறது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் சண்முகம் கூட்டணியில் அதிக தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.
கடந்த காலங்களில் எந்தெந்த இயக்கங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதன் அடிப்படையில் முதல்வா் தொகுதிகளை முடிவு செய்வாா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா்.