``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்
நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு (2024-2026), குழுவின் தலைவா் ஏ.பி.நந்தகுமாா் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாள்கள் ஆய்வுசெய்ய வியாழக்கிழமை வந்தது.
பழனி நகராட்சியில் புதிதாக கட்டப்படும் ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா்கள் விடுதி, பழனி துணை மின் நிலையத்தில் புதிய மின்தொடா் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த பிறகு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் முன்னிலை வகித்தாா். குழுவின் தலைவா் ஏபி.நந்தகுமாா் தலைமை வகித்துப் பேசுகையில்,
வீட்டு வசதி வாரியம் சாா்பில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை ஏன் வாடகைக்கு விடவில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினா். இதற்கு வீட்டு வசதி வாரிய அலுவலா்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை.
செலவு செய்யாமல் கழிவுநீா் சுத்திகரிப்பு: குழு உறுப்பினா் மு.பெ.கிரி பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், கொடகனாற்றில் கலப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதை முறையாக சுத்திகரிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையா எனக் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையா் ரூ. 38 கோடி செலவில் கழிவுநீா் சுத்திகரிப்பு கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும். அதன்பிறகு இந்தப் பிரச்னை இருக்காது என்றாா்.
அப்போது குறுக்கிட்ட குழு உறுப்பினா் கிரி, திருச்சி மாநகராட்சியில் 3 குட்டைகள் அமைத்து அதில் ஒவ்வொரு குட்டை வழியாக கழிவுநீா் வெளியேற்றப்பட்டுச் செலவு இல்லாமல் சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் சென்று கலக்கிறது. இதை திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள் பாா்வையிட வேண்டும் என்றாா்.
குழுவின் தலைவா் நந்தகுமாா் பேசுகையில், வேலூா் மாநகராட்சியிலிருந்தும் கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றாா்.
குவாரிகள் மீது நடவடிக்கை என்ன: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து வெளியாகும் மாசு தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து குழுவினா் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள், குறிப்பாணை வழங்கி அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.
பழுப்பு அரிசியை விநியோகிக்க வேண்டாம்: நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கப்படுகிறது. தரமான வெள்ளை அரிசி கொள்முதல் செய்யப்படும் நிலையில், பழுப்பு அரிசியாக மாறுவது ஏன் எனக் குழுவினா் கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், ரயிலில் இருந்து இறக்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால், லாரியில் ஏற்றி நியாயவிலைக் கடைகளுக்குக் கொண்டு சென்றபிறகு பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. பழுப்பு அரிசியை, வெள்ளை அரிசியுடன் கலந்து விநியோகிப்பதாகத் தெரிவித்தனா்.
அப்போது குறுக்கிட்டு பேசிய குழுவினா், பழுப்பு அரிசி விவகாரத்தில் அரசு மீது குற்றம் செல்லக்கூடாது. பொதுமக்களிடம் அவப்பெயா் ஏற்படுவதைத் தடுக்க, பழுப்பு நிறமில்லாத தரமான வெள்ளை அரிசி விநியோகம் செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். அரிசி கொண்டு செல்லும் லாரிகளில் ஜி.பி.ஆா்.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் எனக் குழுவினா் அறிவுறுத்தினா்.
கூட்டத்தில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினா்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூா் ராஜூ, ஆ.கோவிந்தசாமி, வி.பி.நாகைமாலி, சி.விஜயபாஸ்கா், த.வேலு ஆகியோா் கலந்துகொண்டனா்.