பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்
பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திமுக மன்ற உறுப்பினா் காளீஸ்வரி பேசுகையில், சாமி தியேட்டா் அருகே கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் எந்த வாா்டுக்கு உரியது எனக் கேள்வி எழுப்பினாா். இதற்குப் பதிலளித்த மன்றத் தலைவா், அந்த நியாயவிலைக் கட்டடத்துக்கும் நகராட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. இக்கேள்வியை வழங்கல் துறையிடம் கேட்க வேண்டும் என்றாா். அதை ஏற்க மறுத்த காளீஸ்வரி, வரி நகராட்சி தானே போடுகிறது என்றாா்.
அவரைத் தொடா்ந்து மன்ற உறுப்பினா் சாகுல் அமீது பேசுகையில், பேருந்து நிலையத்தில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கட்டணக் கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணம் யாருக்கு செல்கிறது. நகராட்சியில் மரங்களை வெட்ட நிதி செலவிடப்பட்ட நிலையில் வெட்டப்பட்ட அந்த மரங்கள் எங்கே என்றாா்.
அதற்கு நகா்மன்றத் தலைவா், அந்த மரங்கள் நகராட்சியின் தண்ணீா்த் தொட்டி வளாகத்தில் உள்ளன என்றாா். இதை சாகுல் அமீது ஏற்க மறுத்தாா்.
மன்ற உறுப்பினா் செபாஸ்டின் பேசுகையில், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே உள்ள கடைகளில் வெளியே வைத்து ஆடுகள் வெட்டப்படுகின்றன. இதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனக் குற்றம்சாட்டினாா்.
கவுன்சிலா் மீனாட்சி தேவி பேசுகையில், உழவா்சந்தை சாலையில் ஆக்கிரமிப்புகளால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப்போக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றாா். கவுன்சிலா் பத்மினி முருகானந்தம் பேசுகையில், சரக்குவேனில் தனியாா் நிறுவனங்கள் குடிநீா் விநியோகிப்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றாா்.