ஷிகான் ஹுசைனியைப் பாதித்த ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?
கராத்தே கலையில் புகழ்பெற்ற ஷிகான் ஹுசைனி ரத்தப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
கராத்தே கலையில் பெயர் பெற்றவரும் வில் வித்தையிலும் தேர்ச்சி பெற்று, உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை படைத்தவர் ஷிகான் ஹுசைனி.
திரைப்பட நடிகரும் கூட. தமிழ் நாடு 'வில்' வித்தை சங்கத்தை ஆரம்பித்து அதன் பொது செயலராகவும் இருந்தவர். பல்வேறு பொறுப்புகளை ஏற்று, நாட்டில் கராத்தே கலையை பல்வேறு தரப்பினருக்கும் பரப்பி வருகிறார்.
இவருக்கு ஏற்பட்ட ஏபிளாஸ்டிக் அனீமியா, ரத்தப் புற்றுநோயாக மாறி இவரது வாழ்நாள் எண்ணப்பட்டு வருவதாக சில ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணல் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.
இவர் தமிழக துணை முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான், இவருக்கு ஏற்பட்ட ஏபிளாஸ்டிக் அனீமியா பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நோய்க்கு ஹைபோபிளாஸ்டிக் அனீமியா, போன் மார்ரோ ஃபெய்லியர் என்றும் அழைக்கப்படுகிறது.
போன் மார்ரோ எனப்படும் எலும்பு மஞ்ஜை போதிய அளவில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையே ஏபிளாஸ்டிக் அனீமியா. எலும்புக்குள் இருக்கும் மெல்லிய திசுப் பகுதியே எலும்பு மஞ்ஜை. இதுதான் ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த தட்டுக்களை உற்பத்தி செய்யும்.
ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் சேதங்களால் ஏபிளாஸ்டிக் அனீமியா ஏற்படுகிறது. ஸ்டெம் செல்கள் என்பது எலும்பு மஞ்ஜையில் உள்ள முதிர்ச்சியடையாத செல்கள் ஆகும், அவை அனைத்து இரத்த அணு வகைகளையும் அதாவது சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ரத்த தட்டுகளையும் உருவாக்குகின்றன. ஆனால், ஸ்டெம் செல்களில் ஏற்படும் காயம் இந்த இரத்த அணு வகைகளின் உற்பத்தி குறைவதற்கு காரணமாகிறது.
இவை ஏற்படக் காரணங்கள்..
சில மருந்துகள், சில வேதிப்பொருள்களின் பயன்பாடு.
அணுக்கதிர் வீச்சுகள், கீமோதெரபி
நோயெதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு
கருவுற்றிருப்போருக்கு
சில நுண்ணுயிரி தொற்றுகள் காரணமாகின்றன. ஆனால், சில வேளைகளில் இதற்கு எந்த அடிப்படைக் காரணமும் கண்டறியப்படுவதில்லை. இந்த நேரங்களில் இதனை இடியோபாதிக் ஏபிளாஸ்டிக் அனீமியா என்கிறார்கள்.