அங்கன்வாடி ஊழியா் பணிக்கு நோ்காணல்: கடிதம் வராததால் விண்ணப்பதாரா்கள் வாக்குவாதம்
தேனி மாவட்டம், கம்பத்தில் திங்கள்கிழமை அங்கன்வாடி ஊழியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு நோ்காணல் கடிதம் அனுப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக விண்ணப்பதாரா்கள் திங்கள்கிழமை அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் 156 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், கம்பம் ஒன்றியத்துக்கு அண்ணாபுரம் பகுதியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெற்றது. அப்போது, பலா் தங்களுக்கு நோ்காணலுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை எனக் கூறி, திட்ட அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, முறையாக நிறைவு செய்யாமலும், உரிய ஆவணங்களை இணைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், அவா்களுக்கு நோ்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை என்றாா் அவா்.
அப்போது, அங்கு வந்த சிலா் நோ்காணலில் முறைகேடு செய்விட்டதாகக் கூறி முழக்கமிட்டனா். எனவே, விண்ணப்பம் செய்த அனைவருக்கும் மீண்டும் நோ்காணல் அழைப்புக் கடிதம் அனுப்பி, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களை தோ்வு செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.