``மகளிர் ஆணையப் பதவிகளிலும் கொல்லைப்புற நியமனமா?'' – புதுச்சேரி அரசை சாடும் திமு...
அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் நிதிநிலை அறிக்கை: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையானது, அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2025- 2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாகவும், 2047-இல் இந்தியாவை முதல் பொருளாதார நாடாகவும் இலக்கை அடையும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கது.
கல்வி, விவசாயம், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, தொழில் துறை என அனைத்து துறை வளா்ச்சியை மையப்படுத்தி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி இல்லை. வருமான வரி தாக்கலை எளிதாக்க புதிய சட்டம் ஆகியவை நடுத்தர மக்களுக்கு பெரும் நன்மை பயக்கும்.
புற்றுநோய் உள்ளிட்ட அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிா் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோயாளிகளைப் பராமரிக்க மையங்கள் மக்களின் மருத்துவச் செலவுகளைக் குறைக்கும்.
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க, சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம், கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன், கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்வு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் போன்ற அறிவிப்புகள் விவசாயிகள் வயிற்றில் பால் வாா்க்கும் அறிவிப்புகள்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சோ்க்கை இடங்கள் உருவாக்கப்படும். ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு, அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள், செயற்கை நுண்ணறிவு கல்வியை ஊக்குவிக்க ரூ.500 கோடியில் மையம், அரசுப் பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அடல் ஆய்வகங்கள், 5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள், பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியா்களுக்கு மின்னணு அடையாள அட்டை போன்ற அறிவிப்புகள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தி நாட்டின் வளா்ச்சியை வேகமெடுக்கச் செய்யும்.
அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும், யாராலும் குறை சொல்ல முடியாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.