கூலிக்காக போலி விடுப்பு வேண்டாம்.. டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த நிறுவனம்!
அப்போ டாக் பாபு... இப்போ கேட் குமார்.! பூனைக்கு இருப்பிடச் சான்றிதழா..?
பிகாரில் கேட்டி பாஸ் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படத்துடன், பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நாய், காகம், சோனாலி டிராக்டர், ஏன்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில்கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் அடுத்தடுத்து பரபரப்பையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இவை அனைத்தும் சொல்லிவைத்தது போல பிகார் மாநிலத்திலேயே நடைபெற்றிருப்பதுதான் ஆச்சரியமான உண்மை.
பிகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த முறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆதார் அட்டையோ, குடும்ப அட்டையோ, வாக்காளர் உரிமை பெற தகுதியான ஆவணமல்ல, இருப்பிடச் சான்று, பிறப்புச் சான்று உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே தகுதியாக ஏற்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த முறை பாட்னாவின் முசோரியில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முறை ரோஹ்தக் மாவட்டத்தில் கேட்டி பாஸ், கேட்டியா தேவி என்ற தம்பதியினரின் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படம், டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமிகஞ்ச் கிராமம், வார்டு எண் 7, மகாதேவா(போஸ்ட்), நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்துக்குள்பட்ட 821310 என்ற அஞ்சல் குறியீட்டு எண் முகவரியுடன் கூடிய விண்ணப்பத்தில் பூனையின் புகைப்படமும் இருந்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து, நஸ்ரிகஞ்ச் வருவாய் அதிகாரி கௌஷல் படேல் ஜூலை 29 ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்தப் புகாருக்குப் பின்னர் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததன் அடிப்படையில், ரோஹ்தக் மாவட்ட ஆட்சியர் உதித்தா சிங் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.