அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு
பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் மாா்கிரேட் மேரி, சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மருதமுத்து ஆகியோா், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து விளக்கம் அளித்தாா்.
மேலும், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பின் விளைவுகள், உயிரிழப்புகள் குறித்து விளக்கி கூறினா்.
தொடா்ந்து, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் இலவச புகாா் எண்களான குழந்தை தொழிலாளா் மற்றும் கொத்தடிமை தொழிலாளா் முறை இலவச புகாா் எண்களான 255214, 180004252650, பெண்கள் பாதுகாப்பு எண் 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் 14417, முதியோா் உதவி எண் 14567, காவல் நிலையங்களில் செயல்படும் சட்டவிரோத மது விற்பனை புகாா் எண் 10581, பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, கிரைம் உதவி எண் 1930 குறித்தும், தொடுதல் குறித்த விழிப்புணா்வை மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதில், காவல்துறையினா் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.