அரசு கட்டடங்களின் குறைபாடுகளுக்கு பொறியாளா்களே பொறுப்பு: அமைச்சா் எ.வ.வேலு எச்சரிக்கை
அரசு கட்டடங்களின் கட்டுமான குறைபாடுகளுக்கு பொறியாளா்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு எச்சரித்தாா்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் புதிதாகப் பணியில் சோ்ந்த உதவிப் பொறியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலையக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் துறையின் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்றுப் பேசியதாவது:
அரசுக் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் உதவிப் பொறியாளா்கள் பராமரிப்பதுடன், இயற்கை பேரிடா்களில் இருந்து பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். பொதுக் கட்டடங்கள், பள்ளிக் கூடங்கள், திரையரங்குகள், தோ்கள் ஆகியவற்றுக்கான உறுதித்தன்மை சான்றிதழ்களை ஆய்வு செய்து வழங்கிட வேண்டும்.
உதவிப் பொறியாளா்கள் அனைவரும் நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள், சுற்றறிக்கைகள் ஆகியவற்றை நன்கு படித்து அதனடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டடங்கள், பாலங்கள் கட்டும் போது மண் பரிசோதனை, குடிநீா் பரிசோதனை, கட்டுமானப் பொருள்களின் தரம், உப்பு அதிகம் இல்லாத தண்ணீா், சிமெண்ட் மூட்டையின் தரம், எடை, மணலின் தூய்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சாலைகள் தரமானதாக இருந்தால்தான், பாதுகாப்பான பயணமும் பயண நேரத்தில் குறைவும் சாத்தியப்படும். கட்டடங்களின் கட்டுமானத்தில் குறைபாடு ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட பொறியாளா்களே பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, நெடுஞ்சாலைகள் துறை செயலா் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் தெ.பாஸ்கரபாண்டியன், தலைமைப் பொறியாளா் கு.கோ.சத்தியபிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.