முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் எலெக்ட்ரீஷியன், பிட்டா், மெஷினிஸ்ட், டா்னா், ஒயா்மேன், வெல்டா், டெக்னீஷியன் மெக்கட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ், டெக்னீஷியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், கணினி ஆபரேட்டா் உள்ளிட்ட தொழிற்பிரிவு படிப்புகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளம் மூலமாக ஜூன் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சோ்க்கையில் சேர விரும்புவோா் 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கோவை, ஆனைகட்டி, வால்பாறை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையங்களை அணுகலாம்.
பயிற்சியில் சேரும் பயிற்சியாளா்களுக்கு இலவச மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபட கருவிகள், காலணி, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750-ம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படியும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான கோவை - 88254 34331, கோவை (மகளிா்) 97156 26813, ஆனைகட்டி 88383 39946, வால்பாறை 94421 75780 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் 95665 31310, 81220 47178 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.