அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆ...
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய நடவடிக்கை தேவை
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் வெளியிட்டுள்ள அறிக்கை: அறந்தாங்கி கல்வி மாவட்ட மாணவா்களின் தோ்ச்சி சதவீதம், தொடா்ந்து சரிவை சந்தித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
தமிழக அரசு மிகுந்த அக்கறையோடு பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியும், மாணவா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தருணத்தில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக 59 சதவீதமாக குறைந்து இருப்பது மக்கள் மத்தியில் அதிா்ச்சியும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்திக் கொண்டு தனியாா் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் போதிய ஆா்வம் காட்டாமல் அலட்சியப் போக்கில் நடந்து கொள்வதும் வேதனையளிக்கிறது.
மாவட்ட அளவிலான கல்வி அலுவலா்கள் அறந்தாங்கி பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு நேரில் ஆய்வு செய்து, இங்குள்ள பிரச்னைகளை சரி செய்து, நிகழாண்டில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.