ஆன்லைனில் நோ்காணல் நடத்தி வேலை தருவதாக பணமோசடி: 14 போ் கைது!
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் பலி?
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில் பாகிஸ்தானில் செயல்பட்ட 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டு இருநாட்டு ராணுவங்களும் முக்கிய நகரங்களின் மீது தாக்குதல்கள் நடத்தின.
அதில், இந்திய ராணுவத்தின் கட்டமைப்புகள் மீது பாகிஸ்தான் சுமார் 300 - 400 ட்ரோன்களின் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களுக்கு, துருக்கியில் தயாரிக்கப்பட்ட ராணுவ ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில், பாகிஸ்தானுக்கு உதவி வந்த துருக்கி ராணுவ நிபுணர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பாகிஸ்தான் - துருக்கி ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடந்த சில காலமாக அதிகரித்து காணப்படுகிறது. ராணுவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
மேலும், துருக்கி அரசு பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பி வைத்தது மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இத்துடன், ஆபரேஷன் சிந்தூர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடும் என கர்னல் சோஃபியா குரேஷி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!