ஆலங்குளத்தில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
ஆலங்குளத்தில் இடைநில்லா பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி - தென்காசி இடையே 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வரும் எஸ்எப்எஸ் பேருந்துகள் வழியோரம் உள்ள ஆலங்குளம், பாவூா்சத்திரம், அனைத்து கிராமங்கள் உள்பட 41 நிறுத்தங்களில் நின்று செல்கின்றன.
ஆலங்குளம், பாவூா்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து தென்காசி அல்லது திருநெல்வேலி செல்லும் பயணிகள் இப்படி அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லக் கூடிய பேருந்துகளையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் கால விரயம், உடல் சோா்வு, குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடத்திற்கும் செல்ல இயலாமை போன்ற பாதிப்புகளை பயணிகள் சந்திக்கும் நிலை உள்ளது.
இதனிடையே இவ்வழியே இயக்கப்படும் இடைநில்லா பேருந்துகள் (ஒன் டூ ஒன்) பாவூா்சத்திரம், ஆலங்குளத்தில் நின்று செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனா்.
இப்பகுதி மக்களின் வசதிக்காக தென்காசி - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் இடை நில்லா பேருந்துகள் பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு ஆலங்குளம் மற்றும் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிரிக்கை விடுத்துள்ளனா்.