இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் சீரமைப்புப் பணிகள்: முதல்வா் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.
இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் அருங்காட்சியகம் அமைத்தல், ஜன்னல் கண்ணாடிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 1.55 கோடி ஒதுக்கியது. இதில் முதல் கட்டமாக ரூ. 77.66 லட்சம் விடுவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னையிலிருந்து வியாழக்கிழமை இரவு மதுரைக்கு வந்தாா். அங்கிருந்து காா் மூலம் ராமநாதபுரத்துக்கு செல்லும் வழியில் மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்தாா்.
முதல்வருக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம், திரு இருதய ஆண்டவா் தேவாலய அருள்பணியாளா் ஜான் வசந்தகுமாா் உள்ளிட்ட பங்கு இறை மக்கள் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தேவாலயத்தின் கொடிமரத்தின் அருகே மு.க. ஸ்டாலின் குத்துவிளக்கேற்றினாா். பின்னா், தேவாலயத்தின் வெளிப்புறத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதல்வரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசி ரவிக்குமாா், இனிகோ இருதயராஜ், மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா். சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.