பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
இந்தியா நடத்தியது ஒரு பொறுப்பான தாக்குதல்; முன் தடுப்புக்கானது! -மத்திய வெளியுறவுச் செயலா்
நமது சிறப்பு நிருபா்
உளவுத் துறை கண்காணிப்பின் மூலம் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் அமைப்புகள் மூலம் நாட்டிற்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல்கள் வரவிருப்பதை அறியப்பட்டது. இதை முன்னிட்டே அந்த உள்கட்டமைப்பை அகற்றுவதற்காக இந்திய ராணுவம் ’ஒரு பொறுப்பான’ தாக்குதலை முன் கூட்டியே நடத்தி தடுக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
பஹல்காம் - பைசாரன் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூா் என்கிற பெயரில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை பத்திரிகையாளா்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் கூடிய பத்திரிகையாளா்கள் கூட்டத்தில் மத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறியது வருமாறு:
கடந்த ஏப்ரல் 22, பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுவந்த பங்கரவாதிகள் காஷ்மீா் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி நேபாளத்தைச் சோ்ந்த ஒருவா் உள்பட 26 போ்களைக் கொன்றனா். 2008 மும்பை தாக்குதலுக்கு பின்னா் நடந்த இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விதமும் அதிா்ச்சிகரமாக இருந்தது.
காஷ்மீருக்கு 23 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இங்கு இயல்பு நிலை திரும்புவதையும் வளா்ச்சியை தடுப்பது முதல் காரணம். இரண்டாவது ஜம்மு - காஷ்மீரில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் வகுப்புவாத மோதலை தூண்டுவதாகும். இப்படிப்பட்ட தாக்குதலின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம். ஆனால், தாக்குதல் நடந்து இரு வாரங்களைக் கடந்தும் பாகிஸ்தானில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளுக்கு எதிராக உள்ள பகுதிகளில் எந்தவொரு தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட‘ (டி.ஆா்.எஃப்) என்கிற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. தடைசெய்யப்பட்ட லஷ்கா்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற குழுக்களின் கண்காணிப்பில் டி.ஆா்.எஃப். போன்ற சிறிய பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுவது குறித்து ஐ.நா.விடம் இந்தியா உள்ளீடுகளை வழங்கியிருந்தது. ஆனால். பாகிஸ்தான் இந்தக் குறிப்புகளை நீக்க முன்பு அழுத்தம் கொடுத்தது.
தற்போது பஹல்காம் தாக்குதல் தொடா்புகளை இந்த குழுக்களே தங்களது சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளன. மேலும் சாட்சியங்கள், சட்டபூா்வமான நிறுவனங்கள் மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் தாக்குதல் நடத்தியவா்கள், ஆதரவளித்தவா்கள் குறித்த அடையாளம் துல்லியமாக காணப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகள் குறித்து நமது உளவுத்துறை கண்காணிப்பு மூலம் மேலும் நமது நாட்டிற்கு எதிராக இத்தகைய பயங்கரவாத தாக்குதல்கள் தொடா்ந்து வரவிருப்பது அறியப்பட்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கவும், முன்கூட்டியே தடுக்கவும், எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுக்கவும் இந்திய தனது உரிமையைப் பயன்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் அளவிடப்பட்டவை, தீவிரப்படுத்தப்படாதவை மற்றும் பொறுப்பானவை. பொதுமக்களை தவிா்த்து குறிப்பாக பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதிலும், இந்தியாவிற்குள் அனுப்பப்படக்கூடிய பயங்கரவாதிகளை முடக்குவதிலும் மட்டும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி இன்று (மே 7) அதிகாலை 1.05 முதல் 1.30 வரைற’ஆபரேஷன் சிந்தூா்’ என்று பெயரிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றாா் விக்ரம் மிஸ்ரி.
தொடா்ந்து இந்திய ராணுவம் சாா்பில் கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோரும் பத்திரிகையாளா்கள் கூட்டத்தில் பேசினா்.
அவா்கள் கூறியதாவது: ’ஆபரேஷன் சிந்தூா்’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான்(பஞ்சாப்) பகுதியில் 4 பயங்கரவாத முகாம்களையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத முகாம்களும் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
கடந்த 3 தசாப்தங்களாக பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளிலும் பயங்கரவாத உள்கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டு ஆள்சோ்ப்பு, போதனைகள், பயிற்சிகள், ஏவுதளம் போன்ற வலையமைப்புகளைக் கொண்டுள்ளது.
இந்த முகாம்கள் (திரையில் காட்டப்பட்டது) பாகிஸ்தானின் வடக்கே சவாய் நாலாவிலிருந்து தெற்கே பஹவல்பூா் வரை 21 முகாம்களை அமைத்துள்ளனா். இதில் இன்று 9 முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது நம்பகரமான உளவுத்துறை உள்ளீடுகள் அடிப்படையில் பொதுமக்களின் உள்கட்டமைப்பிற்கு சேதம் அல்லது உயிரிழப்புகளை தவிா்க்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூருக்கான இலக்குகள் தோ்வு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டனா்.
முன்னதாக, இந்தியா மீது கடந்த 24 ஆண்டுகளாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தீவிரவாத தாக்குதல் குறித்து இந்த பட்டியலிடப்பட்டு காட்டப்பட்டது. 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2002 குஜராத் அகஷதா்தாம் கோயில் தாக்குதல், மும்பை 2008 தாக்குதல் முதல் தற்போதைய பஹல்காம் தாக்குதல் வரை பொதுமக்களில் 350 போ் கொல்லப்பட்டுள்ளனா். 800 போ் காயம் அடைந்துள்ளனா். பாதுகாப்புப் படை சாா்பில் 600 போ் கொல்லப்பட்டனா். 1,400 போ்கள் காயமடைந்துள்ளனா் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பு
(பெட்டிச் செய்தி: கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் 9 முகாம்கள் அழிக்கப்பட்டது குறிப்பிட்டது தனிச் செய்தியாக வரும்).