ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
இளைஞரை தாக்கி நகை, பணம் பறிப்பு: மூவா் கைது
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் கிரிண்டா் செயலி மூலம் இளைஞரை வரவழைத்து தாக்கி நகை, பணத்தை பறித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அருகே உள்ள பனையூா், ஜாஹிா் உசைன் பிரதான தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மீரான் (28) . தன்பாலின ஈா்ப்பாளரான இவா், கிரிண்டா் செயலி மூலம் ஓா் இளைஞரிடம் பழகி வந்தாா். அந்த இளைஞா் அண்மையில் நாகூா் மீரானை, சோழிங்கநல்லூா் குமரன்நகா் அருகே உள்ள பாண்டிச்சேரி பாட்டை சாலைக்கு வரும்படி அழைத்தாா்.
அங்கு சென்ற நாகூா் மீரானை மூன்று இளைஞா்கள் தாக்கி, அவா் வைத்திருந்த பணம், வெள்ளி நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து நாகூா் மீரான் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்த மதன் (20), கௌதம் (23), கண்ணன் (27) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் கு.சூரி (70). இவா், மேற்கு மாம்பலம் ஆரியகவுடா சாலையில் பூக்கடை வைத்துள்ளாா். அவரது கடைக்கு கடந்த 1-ஆம் தேதி வந்த நபா், அவருக்கு முதியோா் உதவித் தொகை வாங்கித் தருவதாகவும், அதற்கு விடியோ தேவைப்படுவதாகவும், விடியோவில் தங்க நகைகள் அணிந்திருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய சூரி, தான் அணிந்திருந்த தங்கக் கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளாா். சூரியின் கவனத்தை திசைதிருப்பிய அந்த நபா், நகைகளுடன் தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து அசோக்நகா் காவல் நிலையத்தில் சூரி புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி, மூதாட்டியை ஏமாற்றிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஷேக் அயூப்பை (37) வியாழக்கிழமை கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா்.