இஸ்ரேலை தாக்க முயன்ற ஹவுதிகளின் ட்ரோன் தகர்ப்பு!
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை அனுப்பிய ட்ரோனை, அந்நாட்டு ராணுவம் தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலின் எலாட் நகரத்தின் மீது தாக்குதல் நடத்த, யேமனின் ஹவுதி படைகள் அனுப்பிய ஆளில்லா ட்ரோனை, இஸ்ரேலின் விமானப் படை தகர்த்ததாக இன்று (ஜூலை 15) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில், உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து ஹவுதி படையின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு, பதிலடியாக பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சிப்படை, இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதனால், பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், யேமன் நாட்டிலுள்ள ஹவுதிகளின் ஏராளமான துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது.
முன்னதாக, ஜூலை 10 ஆம் தேதி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலுள்ள பென் குரியன் விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிராகன் விண்கலத்தின் கதவுகள் திறப்பு! வெளியே வந்தார் சுபான்ஷு சுக்லா!