இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்ததாகக் குறிப்பிட்டு, இச்சம்பவத்தை இஸ்ரேல் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்திற்குட்பட்ட காஸாவின் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹமாஸுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தற்போது இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் விமான நிலையத்திற்குச் சொந்தமான இடங்கள் சேதமடைந்தன.
அதாவது, விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திலிருந்து 75 மீட்டர் தொலைவில் ஹவுதியின் ஏவுகணை விழுந்து தாக்கியுள்ளது.
இதனால், அந்த விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டு, விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் பேசியதாவது, 'எங்கள் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏழு மடங்கு பதிலடி கொடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க |பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!