கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்வர் மீண்டும் கோரிக்கை
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160-வது ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரையில், மெட்ராஸ் பார் அசோசியேசனின் 160-ஆவது ஆண்டு விழாவினை சேர்த்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது விழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்! அதற்காக என்னுடைய வாழ்த்துகள்!
“அரசமைப்பு என்பது, சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடைவதற்கான ஒரு கருவி” என்றும், “அரசமைப்பு என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வாழ்க்கையின் கொள்கையாக அங்கீகரிக்கும் ஒரு முறை” என்றும் மாமேதை அம்பேத்கர் சொன்னார்.
அரசமைப்பு ரீதியாக, இந்தியா ஒரு ஜனநாயக - சோசலிச -மதச்சார்பற்ற - இறையாண்மை பொருந்திய குடியரசு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு இது உத்தரவாதம் அளிக்கிறது.
அரசமைப்புச் சட்டமானது அரசாங்க கட்டமைப்பு, நடைமுறைகள் மற்றும் அதிகாரங்களுக்கான வழிகாட்டுதல்களை நிறுவுவதோடு, அடிப்படை உரிமைகள், மையக் கொள்கைகள் மற்றும் தங்கள் நாட்டிற்கான குடிமக்களின் கடமைகளையும் வரையறுக்கிறது.
இந்தியாவில் வெவ்வேறு மதம், இனம் மற்றும் பண்பாட்டு நடைமுறைகள் இருந்தாலும், நம்முடைய அரசமைப்புச் சட்டம், அதன் மாற்றும் அணுகுமுறையின் காரணமாக உயிர்ப்புடன் இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக உறுதியான தூண்களாக நிற்கும் சுதந்திரமான நீதித்துறை, சிறந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுடைய பங்களிப்பு ஆகியவை அரசமைப்பின் உயிர்ப்பான நிலைத் தன்மைக்குக் காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
அண்மைக் காலங்களில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது.
நிதி, கல்வி போன்ற பல விஷயங்களில், மாநில அரசுகளின் சுயசார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
அரசமைப்புச் சட்டத்தின் ஆளுமையை உறுதி செய்வதில், மாநிலங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.
கற்றறிந்த நீதியரசர்களும், வழக்கறிஞர்களும், இந்த அவையும் அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக செயல்படுகிறார்கள்.
நம்முடைய அரசு, அரசியல் சாசனத்தின் வார்த்தைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே நான் குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல், நீதித் துறைக்கும், வழக்குரைஞர்களின் நலனுக்கும், சட்டக்கல்விக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நீதித் துறை உட்கட்டமைப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளை மேம்படுத்தித் தர தமிழ்நாடு அரசு என்றைக்கும் துணை நிற்கும்.
உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் வருகைபுரிந்துள்ள இந்த நேரத்தில், சென்றமுறை இதே இடத்தில் நான் வைத்த ஒரு முக்கியமான கோரிக்கையை மீண்டும் ஒருமுறை இங்கே நினைவுபடுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்தால், தென்மாநில மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பதை மீண்டும் இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னோடியான அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி, என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
“அரசமைப்புச் சட்டம் என்பது வழக்கறிஞர்களின் கையில் இருக்கும் ஒரு ஆவணம்தானே எனக் கருதக்கூடாது; அது நமது வாழ்க்கைப் பயணத்தில், நமது வாழ்வின் தரத்தையே மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனமாகும்; அது எப்போதுமே இந்த மண்ணின் ஆன்மாவாக விளங்குகிறது என்று அம்பேத்கர் சொன்னார்!
அதுபோல வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்; செயல்பட வேண்டும் என்று கேட்டு, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.