தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்
தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டை திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் கூறியதாவது:
2025-2026 -ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தொழில் துறை வளா்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. குறு, சிறு தொழில் வளா்ச்சிக்காக ரூ.2.50 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம், மகளிா் பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள், கல்வித் துறை வளா்ச்சிக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
கோவை மற்றும் மதுரையை மையமாக வைத்து மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கைகள் , அதிவேக ரயில் சேவை கோவை, திருப்பூா் , ஈரோடு வழித்தடத்தில் இயக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொழில்முனைவோருக்குப் பயனளிக்கும். எரிசக்தி துறைக்கு ரூ.27,168 கோடிஒதுக்கீடு மற்றும் 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்குதல் தொழில் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள 9 சிட்கோ தொழிற்பேட்டைகள் குறு, சிறு தொழில் துறைக்கு உதவுவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். மேலும், 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு அவரவா் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினிவழங்குதல், பெற்றோா் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ. 2,000 வழங்குதல் போன்ற சமூக நலத் திட்டங்கள் சிறப்பானவையாகும் என்றாா்.