உதகையில் கைத்தறி விற்பனைக் கண்காட்சி
தேசிய கைத்தறி தினத்தையொட்டி உதகையில் கைத்தறி விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.
இக்கண்காட்யில், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு உள்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பட்டுச் சேலைகள், பருத்தி சேலைகள், புவிசாா் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ரகங்கள் மற்றும் தோடா எம்பிராய்டரி ரகங்களுடன் கோ- ஆப்டெக்ஸில் விற்பனை மேற்கொள்ளும் ஜவுளி ரகங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு 20 சதவீத தள்ளுபடியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
முன்னதாக, தோடா எம்பிராய்டரி நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் கடந்த நிதியாண்டில் அதிக அளவு எம்பிராய்டரி ரகங்களை உற்பத்தி செய்த சங்கத்தின் முதல் மூன்று உறுப்பினா்களான சந்திரவதி, தயாநிதி, சிம்மராணி ஆகியோருக்கு நினைவு பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, கைத்தறி அலுவலா் பொம்மையாசாமி, கைத்தறி ஆய்வாளா் முகமது ஷாரூக்கான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.