உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
உத்தரகண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் மேலும் இருவரைத் தேடும் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன.
உத்தரகாசி மாவட்டத்தில், யமுனோத்ரி மலைப்பாதையில், கைஞ்சி பைரவர் கோயில் அருகில் நேற்று (ஜூன் 23) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், யமுனோத்ரி கோயிலுக்குச் சென்று திரும்பிய 5 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினர், படுகாயமடைந்த மும்பையைச் சேர்ந்த ராசிக் என்பவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில், நிலச்சரிவில் சிக்கி பலியான இருவரது உடல்கள் சிதைந்த நிலையில், ஜூன் 23 ஆம் தேதி இரவு கண்டுபிடிக்கப்பட்டன.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிசங்கர் (வயது 47) மற்றும் அவரது மகள் கியாத்தி (8) என்பது தெரியவந்தது.
இந்நிலையில், நிலச்சரிவில் மாயமான தில்லியைச் சேர்ந்த பவிகா (11) மற்றும் மும்பையைச் சேர்ந்த கம்லேஷ் ஹெத்வா (35) ஆகியோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!