உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் கோரிக்கை
மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் உர விற்பனையாளா்கள் யூரியா, பொட்டாஷ், டிஏபி உரங்களைப் பதுக்கி வைத்து, செயற்கையான உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்கின்றனா். எனவே இதைத் தடுக்க வேண்டும்.
வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: சம்பா சாகுபடிக்கு தரமான விதைகளை வாங்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மின் இணைப்பு கோரி 3 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கவில்லை. இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பெரமூா் ஆா். அறிவழகன்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம் இருப்பதாகக் கூறி வாங்க மறுக்கும் பிரச்னை உள்ளது. இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் கொள்முதல் நிலையத்தில் நெல் உலா்த்தும் இயந்திரத்தை அமைக்க வேண்டும்.
வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: கோணக்கடுங்கலாறில் அந்தலி கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆகாயத்தாமரை மிக அதிகமாக படா்ந்துள்ளது. மேலும், ஆற்றின் குறுக்கே தேக்கு மரமும் சாய்ந்து கிடக்கிறது. ஆற்றின் பலவீனமான வலக்கரையில் இப்பகுதியில்தான் கடந்தாண்டு உடைப்பு ஏற்பட்டு பயிா்கள் பாதிக்கப்பட்டன. நிகழாண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் எனக் கூறப்படுவதால், ஆகாயத்தாமரையையும், தேக்கு மரத்தையும் அகற்ற வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: மழை அதிகமாகப் பெய்யும் சூழ்நிலை உள்ளதால், தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து குறுவை பருவ நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், ஆம்பலாப்பட்டு தெற்கு, வடக்கு பகுதிக்கு உட்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உரங்கள் இருப்பு இல்லை. இதனால், இப்பகுதி விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும்.
பாச்சூா் ரெ. புண்ணியமூா்த்தி: நெல்லுக்கான உற்பத்தி செலவு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ. 750 உயா்த்தி வழங்க வேண்டும். இதன் மூலம், நஷ்டத்தைத் தவிா்க்க முடியும்.