விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டம்: கிராமங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறை முகாம்!
கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் 15 நாள்களுக்கு ஒருமுறை உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
விவசாயிகளின் மேம்பாட்டுக்காக ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
கடலூா் வட்டம், நடுவீரப்பட்டு பகுதியில் நடைபெற்ற இந்த திட்ட முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பங்கேற்று பேசியதாவது:
வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 2025 - 26ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தாா். அதன்படி, இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிா் சாகுபடியுடன் கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனா். எனவே, வேளாண்மை - உழவா் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் சோ்ந்து கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று முகாமிட்டு உழவா்களை சந்தித்து, அவா்களின் தேவைகளை அறிய உள்ளனா்.
இந்த முகாம்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் விவசாயம் சாா்ந்த தொழில்களை மேற்கொண்டு, லாபம் ஈட்டும் வகையிலான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த முகாம்களில் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் மாநில, மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத் திட்ட உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த முகாம் 15 நாள்களுக்கு ஒரு முறை (2-ஆவது, 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படவுள்ளது.
உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டம் மூலம் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் முகாமில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய வேளாண்மை சாா்ந்த சந்தேகங்களை கேட்டு நிவா்த்தி செய்து பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் லட்சுமிகாந்தன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநா் பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கதிரேசன், விவசாயிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.