ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘: அமைச்சா் இ.பெரியசாமி ஆலோசனை
‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘ தொடா்பான தரவுகளின் அடிப்படையில் ஊராட்சிகள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை காணொலியில் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஊரக வளா்ச்சி, ஊராட்சி நிறுவனம் சாா்பில் மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்றக் குறியீடு கருத்தரங்கு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
2030-ஆம் ஆண்டுக்குள் நீடித்த நிலையான வளா்ச்சிக்கான 17 இலக்குகளை அடைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீா்மானித்துள்ளது. அந்த வகையில், 9 கருப் பொருள்களின் கீழ் ஒவ்வோா் கிராம ஊராட்சியும் ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றத்துக்கான காரணிகளை உள்ளடக்கி உள்ளூா் இலக்குகள், உள்ளூா் குறியீடுகளை அடைய வேண்டும்.
‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘ என்னும் கிராம வளா்ச்சி நிலையை அறிந்து கொள்வதற்கான அளவுகோலாக மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் முன்னேற்ற குறியீடை அளவீடு செய்வதற்கான முதல்கட்ட கணக்கெடுப்பு 2022-23 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசு இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் வறுமை இல்லாத வாழ்வாதாரம் நிறைந்த ஊராட்சி, நல்வாழ்வு, உள்கட்டமைப்பு, சமூக நீதி, சமூக பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகள் நேயம் என 9 கருப்பொருளின் கீழ் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரம் நிலைப்படுத்தப்பட்டது.
முதல் கட்ட கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டதில் பெரும்பாலான ஊராட்சிகள் சிறந்த தர நிலையைப் பெற்றுள்ளன.
ஊராட்சி முன்னேற்ற கிராம குறியீடுக்கான அடுத்த கணக்கெடுப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதல் கட்ட கணக்கெடுப்பின் விவரங்களை மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் அனைத்து துறைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தும் விதமாக கருத்தரங்குகள், பயிற்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் அவா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட திட்ட இயக்குநா் சா.சதீஸ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.