காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்!
எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா
புது தில்லி: எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கவே மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதைச் சார்ந்த மும்மொழிப் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(மார்ச் 21) பேசியதாவது:
“ஒரு சிலர், ஒரு சில கட்சிகள், தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மொழிப் பிரச்னையை எழுப்புகின்றனர். இதன்மூலம், அரசியல் ரீதியாக ஆதாயம் தேடிக்கொள்வது மட்டுமல்லாது, தம் மீதான ஊழல் குற்றங்களை அவர்கள் மறைக்க முயற்சிக்கின்றனர்.
தாம் செய்துள்ள ஊழலை மூடி மறைப்பதற்காக மொழிப் பிரச்னையை எழுப்பி, அதன்பின் குளிர்காய்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை இது. நாட்டில் மொழியின் பெயரால் போதும்போதும் என்கிற அளவுக்கு ஏகப்பட்ட பிரிவினைகள் ஏற்கெனவே நிலவுகின்றன. எனவே, இனிமேலும், இது போல நிகழக்கூடாது.
ஹிந்தி பிற மொழிகளுக்கு தோழமை மொழியே; இந்தியாவிலுள்ள எந்தவொரு மொழிக்கும் போட்டியல்ல.
மோடி அரசு, இந்திய மொழிகளுக்கான துறையை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அனைத்து இந்திய மொழிகளையும் பரப்ப நடவடடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, அஸ்ஸாமி இப்படி ஒவ்வொரு மொழியையும் இணைத்து நடவடடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.