``என்னையே என்னால காப்பாத்திக்க முடியல, அன்பு மட்டும் தான்..'' - சிகிச்சையில் பொன்னம்பலம் உருக்கம்
கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நடிகர் பொன்னம்பலம் மூன்றாவது முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவருக்கு நடிகர் சிரஞ்சீவி உள்பட பல நடிகர்களும் உதவியுள்ளனர். இந்நிலையில், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் பொன்னம்பலம்.

அதில் அவர், "பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து உடம்பு ரொம்ப முடியாமல் போய், அப்போலோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 நாள் அட்மிட் ஆகியிருந்து வந்துட்டேன்.
அதன் பிறகு இப்போ அட்மிட் ஆகி ஒரு ஐந்து, ஆறு நாள்கள் ஆகிடுச்சு. உடல் முழுக்க இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு. ஏற்கெனவே, மிகப் பெரிய போராட்டத்தில் இருந்து விடுபட்டு வந்திருக்கேன்.
இதுக்கு மூலக் காரணமே டாக்டர் சுப்பாராவ்தான், அவர்கள் என்னைக் காப்பாத்தினாங்க. அவரை கடவுளாக நினைக்கிறேன். இதுவரைக்கும் ஐ.சி.யூ-ல இருந்தேன்.
எமர்ஜென்சியில் தான் அட்மிட் ஆனேன், இப்போ நார்மல் வார்டுக்கு வந்திருக்கேன். குணமாக இன்னும் இரண்டரை மாதம் ஆகும்னு சொல்லியிருக்காங்க.
ஆபரேஷன் பண்ணியிருக்காங்க, ஆசனவாய் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கு. தற்போதைக்கு வேலைக்கு எதுவும் போக முடியாது.

சிரஞ்சீவி சார், சரத்குமார் சார் எனக்கு உதவிகள் பண்ணினாங்க. அதே மாதிரி தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன், சிம்பு, கமல் சார்-னு பலரும் எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்து உதவி பண்ணினாங்க.
நண்பர்களும், நடிகர்களும் நிறைய உதவிகள் பண்ணி, எனக்கு இந்த உயிர் பிச்சையைக் கொடுத்ததுக்கு நன்றியைச் சொல்லிக்கிறேன்.
இப்போ எனக்கு பொருளாதாரத்தில் பல சிக்கல்கள் ஆகிடுச்சு. என்னையே என்னால காப்பாத்திக்க முடியல. யாரையும் குறை சொல்லவும் விரும்பல.
கடந்த ஐந்து வருஷமா வேலைக்கு எதுவும் போகல. அதுல முழுசா 90 சதவீதம் மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி, எப்படியோ இருந்த வாழ்க்கை இப்படி மாறிடுச்சு.
பொருளாதாரப் பிரச்னையில் ரொம்ப அடிபட்டு, தரைமட்டத்திற்கு வந்திருக்கேன்.

எனக்கு இப்படி ஆகிடுச்சுனு ஒரு குறையாக வெளிப்படுத்த வேண்டாம். நான் கொடுத்து வச்ச பணத்தையும் யார்கிட்டையும் நான் கேட்கல. அன்பு மட்டுமே கொடுத்திருக்கேன்.
அதே அன்பு எனக்கு இரட்டிப்பாகக் கிடைச்சிருக்கு. நான் விரைவில் குணமடைந்து திரும்பி வர, ஆண்டவனை வேண்டிக்கொள்ள வேண்டும்." என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.