ஒடிசாவில் அதிகரித்துவரும் வன்கொடுமைகள்: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!
ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில்,
மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களாக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து வருகின்றது. இதையடுத்து வன்கொடுமை மற்றும் பெண்கள் காணாமல் போவது உள்ளிட்ட குற்றங்களின் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு 5 பேர் கொண்ட பெண் தலைவர்களின் குழுவுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவின் கோபால்பூரில் பதிவான கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள், கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்படுவது போன்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைவர் ஒடிசாவிற்குச் சென்று நிலைமை குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உண்மை கண்டறியும் குழுவை நியமித்துள்ளார் என்று அவர் கூறினார்.
உண்மை கண்டறியும் குழுவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ்முன்ஷி குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் ரஞ்சித் ரஞ்சன், பிரணிதி ஷிண்டே மற்றும் எஸ். ஜோதிமணி மற்றும் ஷோபா ஓசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒடிசாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோபால்பூர் கடற்கரையில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் 20 வயது பெண்ணை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜ் பண்டிகையை முன்னிட்டு, கல்லூரி மாணவி அவருடன் 3 பெண் தோழிகள் மற்றும் அவரது ஆண் நண்பருடன் கடற்கரைக்குச் சென்றபோது, அங்கிருந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, அந்த பெண்ணை மாறிமாறி வன்கொடுமை செய்துள்ளனர்.
இளங்கலை மாணவி அவர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்துள்ளார். இதுதொடர்பாக திங்களன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதையடுத்து கோபால்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: உலக தரவரிசை பட்டியலில்.. 54 இந்தியக் கல்வி நிறுவனங்கள்: மோடி பெருமிதம்!