'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
"தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி, மக்களுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டு மக்களின் நலன் கருதி அந்தந்த கட்சித் தலைவர்கள் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், அவர்களின் முடிவுக்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி தொகுதி விவரங்கள் பின்னர் பேசப்படும்.
ஓ. பன்னீர்செல்வம் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருக்கிறார். எனவேதான் அமித் ஷா வருகையின்போது அவரை அழைக்கவில்லை. அமித் ஷா வந்ததற்கான காரணம் வேறு. ஓபிஎஸ் கூட்டணியில் இருப்பதால் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே பாஜக கூட்டணியில்தான் இருக்கின்றனர்.
அதிமுக உள்கட்சி பிரச்னைகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இப்போது இபிஎஸ்தான் கட்சியின் தலைவராக இருக்கிறார். பின்னர் நிலைமை மாறும்போது பார்க்கலாம்" என்று கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் தினசரி நடைபெறும் கொலை, போதைப்பொருள் புழக்கம் போன்ற குற்றச் சம்பவங்கள் வழக்கமானதாக மாறிவிட்டதாகவும், காவல்துறையை முதல்வர் முழுமையாக கையாள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | 'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்