டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
கடலூர்: 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி தரும் வாக்குமூலம்; போலீஸ் சொல்வது என்ன?
கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
அதனடிப்படையில் நேற்று மாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற மணிமேகலையை, சாலை ஓரத்தில் மது குடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சவுக்குத் தோப்புக்குள் இழுத்துச் சென்று வாயில் மண்ணைக் கொட்டி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அதன்பிறகு அவர் அணிந்திருந்த நகைகளைத் திருடிக் கொண்டு தப்பித்து ஓடியிருக்கிறார்.

அதன்பிறகு இயற்கை உபாதைக்காக அந்தப் பக்கம் சென்ற பொதுமக்கள், மயங்கிக் கிடந்த மணிமேகலையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார் கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்.
அதையடுத்து அங்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், எஸ்.கே பாளையத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்ற 24 வயது இளைஞர்தான் மணிமேகலையைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
அதனடிப்படையில் காடாம்புலியூர் பகுதியில் பதுங்கியிருந்த சுந்தரவேலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
அப்போது போலீஸாரைக் கத்தியால் குத்திவிட்டு சுந்தரவேல் தப்பியோட முயன்றிருக்கிறார். அப்போது போலீஸார் சுட்டதில் சுந்தரவடிவேலின் காலில் குண்டு பாய்ந்தது. அதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய எஸ்.பி ஜெயக்குமார், ``இது கூட்டுப் பாலியல் என்று தவறாகத் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

மூதாட்டியை சுந்தரவேல் என்ற ஒரு நபர் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவரைத்தான் தற்போது கைது செய்திருக்கிறோம். இது கூட்டுப் பாலியல் வன்கொடுமை இல்லை.
காடாம்புலியூரில் அவர் பதுங்கியிருப்பது தெரிந்து, பண்ருட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் அங்குச் சென்றனர்.
அப்போது போலீஸாரைக் கத்தியால் குத்தினான் சுந்தரவேல். அதனால்தான் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவன் மீது, தமிழகம் முழுவதும் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் இருக்கின்றன. அந்த மூதாட்டி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, தற்போது நன்றாக இருக்கிறார்” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய பண்ருட்டி போலீஸார் சிலர், ``தலைக்கேறிய மது போதையிலிருந்த சுந்தரவேல், நடைப்பயிற்சியிலிருந்த மூதாட்டியை அருகிலிருந்த சவுக்குத் தோப்பிற்குத் தூக்கிச் சென்றான். ஏதோ விபரீதம் என்று தெரிந்துகொண்ட அந்த மூதாட்டி, `தம்பி என் பேரன் மாதிரிப்பா நீ... என்னை விட்ரு…’ என்று கதறியிருக்கிறார்.

அதன்பிறகுதான் அவர் வாயில் மண்ணை அள்ளிப் போட்டு, பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று சுந்தரவேல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். திருமணம் ஆன இவன், இரண்டு நாட்களுக்கு முன்தான் சிறையிலிருந்து வெளியில் வந்தான்” என்றனர்.