கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி
புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, அம்மாநில முதல்வராக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், தில்லியில் கடந்த பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கடந்த வாரம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று(பிப். 11) ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பார்தாப் சிங் பாஜ்வா ஆம் ஆத்மி கட்சிக்குள் உள்கட்சி பூசல் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, “ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள் கங்கிரஸுடன் தொடர்பிலிருப்பதாகக்” கூறினார்.
இன்னொருபுறம், ஆம் ஆத்மி மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் பேசியுள்ள பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய பகவந்த் மான், “காங்கிரஸ் தலைவர்கள் கடந்த காலங்களில் தாங்கள் இருக்கும் கட்சியைவிட்டு இன்னொரு கட்சியில் சென்றிணைந்து கொண்ட வரலாறு உண்டு. கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்; அப்படியிருக்கையில், அவர்கள் தங்களைப் பற்றி கவலைப்படாமல் பிறரைக் குறித்து விமர்சிக்கின்றனர்.
தில்லியில் காங்கிரஸுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் பார்தாப் சிங் பாஜ்வா பஜ்வா இதுபோன்ற விமர்சனங்களை கடந்த காலங்களிலும் முன்வைத்துள்ளார். அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டேயிருக்கட்டும்.
நாங்கள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து இரத்தமும் வியர்வையும் சிந்தி இக்கட்சியை உருவாக்கியுள்ளோம்.
தில்லி மக்களுக்கு இன்னும் எங்கள் மீது பாசமிருப்பது வெளிப்படுகிறது. தில்லி மாடல் நிர்வாகத்தை பஞ்சாபிலும் செயல்படுத்தியுள்ளோம். பஞ்சாபில் 17 சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களால் தினசரி ரூ. 62 லட்சம் சேமிக்க முடிகிறது.
பஞ்சாபை மாநிலத்தையொரு முன்மாதிரி மாநிலமாக மாற்றி ஒட்டுமொத்த தேசத்துக்கும் எடுத்துக்காட்டாக மற்றுவோம்.
இனி வரும் நாள்களில் மகளிருக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இது மக்களின் பணம், அதனை மக்களுக்காகவே செலவழிக்கிறோம்” என்றார்.