கணவன் கண் முன்னே தண்டவாளத்தில் தவறி விழுந்த மனைவி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!
காட்பாடி ரயில் நிலையத்தில் தவறிவிழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண் தலை துண்டாகி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், பொய்கை மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பிரபாகரன் (36), ராணுவ வீரா். இவரது மனைவி சிந்து (32). பிரபாகரன் ராணுவத்திலிருந்து விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தாா். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்ப தனது மனைவியுடன் காட்பாடி ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்துள்ளாா்.
சபரி விரைவு ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாா். இரவு 10 மணியளவில் சபரி விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்ததும் பிரபாகரன் ரயிலில் ஏறியுள்ளாா். கணவரின் அடையாள அட்டை தன்னிடம் இருப்பதை தாமதமாக அறிந்த சிந்து, அதனை அவரிடம் கொடுக்க முயன்றுள்ளாா். அதற்குள் ரயில் மெதுவாக புறப்பட்டது.
கணவரிடம் அடையாள அட்டையை கொடுக்க கையை நீட்டியதும் சிந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தாா். இதில், ரயில் சக்கரம் ஏறியதில் சிந்துவின் தலை துண்டாகி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைக் கண்ட பிரபாகரன் உடனடியாக ரயிலை நிறுத்தி கீழே இறங்கினாா். தனது மனைவி கண் முன்னே ரயிலில் அடிபட்டு இறந்ததை கண்டு கதறி அழுதாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிந்துவின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.