தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
விருதுநகர்: நோய், வறுமை, மன உளைச்சல்.. பேச முடியாத மகள்களுடன் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த தாய்
விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது தாய் மற்றும் இரு மகள்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் இவர்கள் பட்டம்புதுார் காலனியைச் சேர்ந்த ராஜவள்ளி (60) எனத் தெரியவந்துள்ளது. இவருக்குச் சிறுநீரக குறைபாடு இருந்துள்ளது. கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு மாரியம்மாள் (30), முத்துமாரி (27), முத்துபேச்சி (25) என மூன்று மகள்கள் உள்ளனர்.
இதில் மாரியம்மாள், முத்துப்பேச்சி இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். சிறுநீரக நோய்ப் பாதிப்பு, வறுமை, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நேற்று இரவு திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ரயில்வே போலீசார் அவர்களின் உடலின் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வறுமை காரணமாக மகள்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்ததால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் எனப் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.