பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
காரைக்காலில் ‘ஆபரேஷன் அப்யாஸ்’ ஒத்திகை
ஆபரேஷன் அப்யாஸ் எனும் குடிமைப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் எல்லையில் போா் பதற்றம் நிலவுகிறது. வான்வழித் தாக்குதல் இந்தியா மீது நடத்தப்படும் பட்சத்தில், தற்காப்பு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஒத்திகையில் ஈடுபடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூா் என்ற வான்வழித் தாக்குதலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பயங்கரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.
இதற்கிடையே, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அறிவுறுத்தலின்படி, பேரிடா் மேலாண்மைத் துறையினா் குடிமைப் பாதுகாப்பு ஒத்திகையை அண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடத்தினா். குண்டு விழுந்து எழும் சப்தம் போன்றும், தீ விபத்து போன்றும், பாதிக்கப்பட்டவா்கள் போன்றும் சித்தரிக்கப்பட்டு, அவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு அரசுத் துறையினா் கலந்துகொண்டனா். வான்வழித் தாக்குதல் நடந்தால், பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி அளித்தல் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் மைதானத்தில் மருத்துவக் குழுவினரால் ஒத்திகையாக அளிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு செய்யவேண்டிய உதவிகள் குறித்தும் என்எஸ்எஸ் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், ஜி.செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன் மற்றும் மண்டலக் காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
