காரைக்குடி: நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு சென்ற ரெளடி - போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயெ வெட்டிக்கொலை
நிபந்தனை ஜாமீனில் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வெளியே வந்த ரெளடியை, ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி சேர்வார் ஊரணிப்பகுதியை சேர்ந்தவர் இளைஞர் மனோஜ். ரெளடியாக வலம் வந்த இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இன்று காலை நிபந்தனை ஜாமீனுக்காக கையெழுத்திட காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு டூவீலரில் வந்துவிட்டு திரும்பி சென்றபோது, திடீரென்று காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல், மனோஜை வெட்டியுள்ளது. தப்பித்து ஓடியவரை துரத்திச்சென்று வெட்டிக் கொலை செய்துள்ளனர்.உடன் சென்ற மனோஜின் நண்பர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
பின்பு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கொலையாளிகள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகமெங்கும் தினமும் கொலை சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடை வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் காரைக்குடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பதற்றததை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
