மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ச...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,422 விவசாயிகளிடமிருந்து 2,548 மெ.டன் ராகி கொள்முதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 1,422 விவசாயிகளிடமிருந்து 2,548 மெ.டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், அஞ்செட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ராகி கொள்முதல் நிலையம் மூலம் பயனடைந்து வரும் ராகி விவசாயிகளிடம், ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் அவா் கலந்துரையாடியது:
மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் விவசாயிகள் அதிகளவில் ராகி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த ஆண்டு 35 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் ராகி பயிரிடப்பட்டது. நிகழாண்டில் 42,700 ஹெக்டோ் பரப்பளவில் ராகி பயிரிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் சுமாா் 30 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரியாக ராகி பயிரிடப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதிகளில் நீா்ப்பாசனமுறையில் ராகி பயிரிடப்படுகிறது.
மேலும், ராகி அதிகமாக சாகுபடி செய்யும் மதகொண்டப்பள்ளி, போடிச்சிப்பள்ளி, பாகலூா், பேரிகை, அஞ்செட்டி மற்றும் குப்பச்சிப்பாறை ஆகிய இடங்களில் இடைத்தரகா்களின்றி விவசாயிகள் விளைவிக்கும் ராகியை நேரடியாக விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்கள் கைப்பேசி எண், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய பட்டா, சிட்டா அடங்கல் விவரங்களை நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் அளித்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
விவசாயிகள் விற்பனை செய்யும் ராகிக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கரீப் பருவம் 2024-25-இல் 9 ஆயிரம் மெ.டன் ராகி கொள்முதல் செய்ய தமிழக அரசால் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ராகி ரூ. 42.90 என்ற விலையில் 1,604 மெ.டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டு, 849 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 6.82 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,548 மெ.டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டு 1,422 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 10.45 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
ராகி கொள்முதல் நிலையங்களில் சந்தையில் கிடைக்கும் விலையை விட ரூ. 5 முதல் ரூ. 8 வரை அதிகமாக கிடைப்பதால், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த ராகியை கொள்முதல் நிலையங்களில் அளித்து பயன்பெறலாம் என்றாா்.