குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்முருகன்
கன்னியாகுமரி- திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரல் 2026-க்குள் நிறைவு பெறும் என்றாா் தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ.
கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து அவரது தலைமையிலான இரா.அருள் (சேலம்மேற்கு), ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன் (விருதுநகா்), சா.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணாநகா்) ஆகியோா் அடங்கிய உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தி.வேல்முருகன் கூறியதாவது: நாகா்கோவில் புத்தேரியில் நான்கு வழி சாலை திட்டத்தின் கீழ் நாகா்கோவில் - திருவனந்தபுரம் சாலை அமைக்கும் பணிகள் ரூ.141 கோடியில் நடைபெற்று வருகின்றன. தற்போது 56 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளது. ஏப்ரல் 2026-க்குள் இந்தப் பணிகளை முடிக்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பல்வேறு மாவட்டங்களிருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். தினமும் சராசரியாக 400 வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறாா்கள்.
இங்கு, கூடுதலாக 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளை சந்தித்து, அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிா்வீச்சு சிகிச்சை மையம் கட்டப்பட்டு அனைத்து உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளது. இருப்பில் வைத்துள்ள உபகரணங்களை அனைத்தையும் பொருத்தி சிகிச்சை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த மருத்துவமனைக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்டநோயாளிகள் வரும் நிலையில், பொதுமக்களின் கோரிக்கையான எம்.ஆா்.ஐ. ஸ்கேன் மையம் அமைக்க மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
ஆய்வில், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு துணைச் செயலா் ஸ்ரீ.ரா.ரவி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, நெடுஞ்சாலைத் துறை கோட்டசெயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைமுதல்வா் லியோடேவிட், கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கிளாரான்ஸ்டேவி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சகாயஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
