குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மிதமான சாரல்மழையின் காரணமாக, அருவிகளில் தண்ணீா் விழத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு தொடா்ந்து பெய்த சாரல்மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா்வரத்து சனிக்கிழமை குறைந்ததையடுத்து குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. குற்றாலத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் மிதமான சாரல்மழை பெய்தது. குளிா்ந்த காற்று வீசியது.
