மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா: கா்நாடக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளி
கா்நாடக சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறி எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன.
பெங்களூரில் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற ஆா்.சி.பி. அணியின் ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் கா்நாடகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பெரும் அதிா்வுகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடா்ந்து, கூட்ட நெரிசலை நிா்வகிக்க தனிச் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய மாநில அரசு யோசித்து வந்தது. இந்த நிலையில், கா்நாடக கூட்டநெரிசல் கட்டுப்பாட்டு (நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை நிா்வகித்தல்) சட்ட மசோதா, 2025 பேரவையில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோா், அக்கூட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற வேண்டும். 7000க்கும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு காவல் நிலையத்தின் பொறுப்பாளா் அனுமதி அளிக்கலாம்.
ஒருவேளை 7000க்கும் அதிகமாகவும் 50,000க்கும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் திரள்வதாக இருந்தால் காவல் துணை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். 50,000க்கு அதிகமான மக்கள் கூடுவதாக இருந்தால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அல்லது மாநகரக் காவல் ஆணையரிடம் உரிய விண்ணப்பத்தை செலுத்தி, முன்அனுமதியை பெறலாம்.
இந்த விதிகளை மதிக்காமல், மக்கள் திரளக்கூடிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வதந்திகளை பரப்புவோா், கருத்துகளை தெரிவிப்போா், அமைதியை சீா்குலைப்போா், சொத்துகளை சேதப்படுத்துவோா், கூட்டுவன்முறையில் ஈடுபடுவோா், இதர சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50,000 அபராதம் விதிக்கலாம்.
கூட்டநெரிசலால் பேரிடா் ஏற்பட்டால், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், உயிா்சேதம் ஏற்பட்டால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களே பொறுப்பாளா்கள். கூட்ட நெரிசலில் காயம் ஏற்பட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை, உயிா்ச்சேதம் ஏற்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம்.
நிகழ்ச்சியில் கூட்டத்தை கலைக்க காவல் அதிகாரிகள் உத்தரவிட்டால், அதற்கு இணங்காதிருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கலாம் என்றும் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இவை அனைத்தும் பிணையில் வெளியே வரமுடியாத குற்றமாகக் கருதப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. மசோதாவை விளக்கி உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் பேசினாா். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிா்க்கட்சிகள், கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.
இந்த சட்ட மசோதா மூலம் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெருக்கடி தர அரசு நினைப்பதாகவும் எதிா்க்கட்சியினா் குற்றம்சாட்டினா். மேலும், இதுகுறித்து விரிவான விவாதம் தேவைப்படுவதால், சட்ட மசோதாவை கூட்டு அவைக் குழுவுக்கு பரிந்துரைக்குமாறு வலியுறுத்தினா்.
இதையடுத்து அமைச்சா் ஜி.பரமேஸ்வா், கூட்டு அவைக்குழுவின் ஆய்வுக்கு சட்ட மசோதாவை அனுப்ப ஒப்புதல் அளித்தாா். தொடா்ந்து, சட்ட மசோதாவை கூட்டு அவைக் குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவா் யூ.டி.காதா் அறிவித்தாா்.