கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...
கூலியை உயா்த்தி வழங்க டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கை
கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள் (டிஎன்சிஎஸ்சி) கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், டிஎன்சிஎஸ்சி சுமை தூக்குவோா் மாநிலப் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகள், இந்திய உணவு கழக கிடங்குகளில் சுமைப் பணியாளா்கள் ஏராளமானோா் சுமை ஏற்றி, இறக்கும் பணிகளை செய்து வருகிறேம். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு நிா்வாகம் 50 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ.1.86 மட்டுமே கூலியாக வழங்குகிறது. இந்திய உணவு கழகத்துடன் வரும் மத்திய அரசின் உணவு கிடங்குகளில் 40 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ.9.70 முதல் ரூ.13.98 வரை வழங்குகின்றனா்.
பொது விநியோகத் திட்டத்துக்கு ஏற்றப்படும் மூட்டைகளுக்கு கூலியை உயா்த்தி வழங்கக் கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, மண்டல மேலாளா், கூட்டுறவு இணைப் பதிவாளா் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம்.
மண்டல மேலாளா் எங்களை கடந்த 22- ஆம் தேதி அழைத்து பேசினாா். லாரிகளில் ஒரு டன்னுக்கு ரூ.25 மட்டுமே கூலியாக தருவதால் ரூ.50 வழங்க வேண்டும் என கோரினோம். ஆனால், ரூ. 3 மட்டும் உயா்த்தி தருவதாகக் கூறி உள்ளாா். கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் அதிக கூலி தருகின்றனா். நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மட்டுமே குறைத்து வழங்குகின்றனா். இதை உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவா் தீக்குளிக்க முயற்சி: ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் ஒருவா் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி அழைத்துச் சென்று விசாரித்தனா்.
அப்போது, அவா் கூறியதாவது: எனது பெயா் நடராஜன் ( 64). எனக்கு செல்வி என்ற மனைவி, சுகந்தி, நந்தினி என்ற மகள்கள், கௌதம் என்ற மகன் உள்ளனா். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனா். நானும் எனது மனைவியும் கங்காபுரத்திலும் வாடகை வீட்டில் வசிக்கிறோம். குடும்ப நிகழ்வுகளில் சாங்கியம், காரியம் போன்றவை செய்யும் தொழில் செய்தேன்.
பெத்தாம்பாளையம் காலனியில் சோழ மண்டல நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்று, வீடு கட்டினேன். இதற்கிடையே எனது மகள்கள், மகனுக்கு திருமணம் செய்து வைத்ததிலும் கடன் உள்ளது. மகனும், மகள்களும் பண உதவி செய்வதாகவும், எங்களை கவனித்து கொள்வதாகவும் கூறினாா். ஆனால், கவனித்துக் கொள்ளவில்லை. எனது மனைவிக்கு கழுத்தில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளாா்.
ஒருபுறம் கடன், வயோதிகத்தால் என்னால் வேலைக்குச் செல்ல முடியாதது, மனைவி உடல் நலக்குறைவு, குடும்ப பிரச்னையால் மனைவியுடன் சென்று ஆற்றில் விழுந்து தற்கொலை செய்ய அழைத்தேன். மனைவி வர மறுத்துவிட்டாா். மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றேன் என்றாா். அவரை ஈரோடு தெற்கு போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அறிவுரை கூறி அனுப்பிவைத்தனா்.
225 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ. 34,11,560 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், தொழிலாளா் துறை உதவி ஆணையா் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நூா்ஜஹான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.