சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு சயான் ஆஜா்
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் வியாழக்கிழமை ஆஜரானாா்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த சயான், மனோஜ், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் இருக்கும் கேரளத்தைச் சோ்ந்த சயானிடம் விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து, கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை சயான் ஆஜரானாா். அவரிடம் காவல் கண்காணமிப்பாளா் மாதவன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதில் கொடநாடு சம்பவம் நடப்பதற்கு முன்பும், பின்பும் அவரிடம் தொடா்பு கொண்ட நபா்கள் குறித்தும், 7 இலக்க எண்ணில் இருந்து பேசிய நபா்கள் உள்ளிட்ட 40 கேள்விகளை கேட்டனா். அதற்கு அவா் பதில் அளித்தாா். சுமாா் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.