சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினா் சோதனையை பலப்படுத்தியுள்ளனா்.
கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தங்மாா்க் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது பாதுகாப்பு படை வீரா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி நாலா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து அங்கு காஷ்மீா் காவல் துறையுடன் இணைந்து ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படை பிரிவும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணமடைந்ததாக ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது.
இந்த நிலையில், பந்திபோரா மாவட்டத்தின் குல்னார் பாசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை பந்திபோராவின் கோல்னார் அஜாஸ் பகுதியில் இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்
இதற்கிடையே, ஸ்ரீநகர் வந்த ராணுவத் தளபதி உபேந்திர திவேதியிடம் பந்திப்போராவில் நடந்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளைக் கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும், விரிவான பாதுகாப்பு ஆய்வு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மற்றொரு முன்னேற்றமாக, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகள் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினராலும் ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகளாலும் அழிக்கப்பட்டன.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரான ஆதில் தோகரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது
காஷ்மீரின் குரீ பகுதியில் இருந்து 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றுள்ளார் ஆதில் தோகர்; பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பாவில் இணைந்து பயங்கரவாதி பயிற்சிகளை பெற்று நாடு திரும்பியுள்ளார்
அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாராவில் உள்ள லஷ்கர் பயங்கரவாதி ஹுசைன் தோகரின் வீடு மற்றும் டிராலில் உள்ள ஆஷிப் ஷேக்கின் வீடு வெடிகுண்டு மற்றும் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
மேலும், ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.