பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; முதல்வர்களுக்கு அமித் ஷா அழைப்பு!
மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதை மாநில முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டு வரும்நிலையில், பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை இந்தியா அறிவித்தது. மேலும், இந்தியாவிலுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்யும்வகையில், தங்கள் மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதை அந்தந்த மாநில முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து விவாதிக்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.